Tuesday, January 12, 2016

விவேகானந்தர் எனும் கல்வியாளர் | தேசிய இளைஞர் நாள் | ஜனவரி 12.

முழுவதும் பயணம் செய்த அனுபவத்தோடு சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் விவேகானந்தர். தனது உரைகள் மூலம் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் புகழ் பெற்றார். வெளிநாட்டில் அவருக்கு கிடைத்த சீடர்களில் மார்க்கரெட் எலிசபெத் மிகவும் முக்கியமானவர். இந்தியா அவர் லண்டனில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தார்
. விவேகானந்தரின் கருத்துகளால் கவரப்பட்ட அவரை இந்தியப் பெண்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக விவேகானந்தர் தயார் செய்தார். அதற்காகவே 1898-ல் கல்கத்தா வந்து சேர்ந்தார் அவர். பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்குப் பெண் அடிமைக் கருத்துகள் தலை விரித்து ஆடிய காலம் அது. விவேகானந்தரின் பெண்கள் பள்ளி மார்க்கரெட் எலிசபெத்துக்குச் சகோதரி நிவேதிதா என்று பெயர் வைத்தார் விவேகானந்தர். இந்தியாவில் உள்ள துறவிகளின் நடைமுறையில் முன் எப்போதும் இல்லாதபடி முதல்முறையாக அந்த வெளிநாட்டுப் பெண்ணைத் துறவியாக்கினார். அவருக்கு பரமாச்சார்யா எனும் துறவுப் பட்டத்தையும் வழங்கினார். இந்தியாவின் துறவு வாழ்க்கையில் இத்தகைய நிலைக்கு உயர்ந்த முதல் வெளிநாட்டுப் பெண் இவரே. இதையெல்லாம் நிவேதிதாவின் கல்விப் பணியைப் பலப்படுத்தவே விவேகானந்தர் செய்துள்ளார். ராமகிருஷ்ணரின் மனைவியான அன்னை சாரதா தேவிக்கும் அவருக்கும் அறிமுகமானவர்களையும் கொண்ட கூட்டமும் நடத்தப்பட்டது. “முதலில் உங்களின் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்புங்கள்” என்று கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னணியிலிருந்து எல்லோரையும் உற்சாகமாக இதை ஆதரிக்க வைக்கப் பெரிதும் முயன்றார் விவேகானந்தர். ஆனாலும் பெரிய தயக்கம்தான் இருந்தது. விவேகானந்தர்தான் கட்டாயப்படுத்திப் பெண் குழந்தைகளை வரவழைக்கச் செய்தார். 1898 நவம்பர் 13- ல் காளி பூஜை அன்று கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1848-ல் மகாராஷ்டிரத்தில் ஜோதிபா புலேயும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலேயும் ஆரம்பித்த பெண்கள் பள்ளியைப் போல அது ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரிபாய் புலே இறந்த 1897-க்கு அடுத்த வருடத்தில் அவரது பணியை மேலும் எடுத்து வளர்ப்பதைப் போல விவேகானந்தரின் பள்ளி தொடங்கப்பட்டது. அன்னை சாரதா தேவி பள்ளியைத் தொடங்கி வைத்தார். அந்தப் பள்ளி இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. (http://sisterniveditagirlsschool.org) விவேகானந்தரும் சகோதரி நிவேதிதாவும் மறைந்த பிறகு பள்ளி செயல்படுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டித் தற்போது 1 முதல் 12 வரையான வகுப்புகளோடு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிவேதிதாவைப் போன்ற அர்ப்பணிப்புமிக்க பெண்கள்தான் இன்னமும் பள்ளியின் தலைமையில் உள்ளனர். ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட இந்தியர்களின் துன்பமான நிலையைக் கல்வியால்தான் மாற்ற முடியும் என்று விவேகானந்தர் நம்பினார். அதிலும் இந்தியப் பெண்கள் கல்வி கற்றவர்களாக மாறினால்தான் நாட்டின் நிலை மாறும் என்றார் அவர். அதுதான் அவரைப் பெண்களுக்கான பள்ளியையும் அதற்கான பொறுப்பாளராக நிவேதிதாவையும் தேர்ந்தெடுக்க வைத்தது. கல்வியும் வழங்குவதும் விவேகானந்தருக்குக் கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துகள் இருந்தன. மனிதருக்குள்ளே ஏற்கெனவே இருக்கிற முழுமைத் தன்மையை வெளியே கொண்டுவருவதுதான் கல்வி என்றார் அவர். மனிதர்களைச் சொந்தக்காலில் நிற்கவைத்துத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் தருவதாகக் கல்வி இல்லை என்பது அவருக்கு வருத்தம். வெறும் தகவல்களைச் சேகரித்துத் தருவதல்ல. சிறந்த மனிதரை உருவாக்குவதாகவும் நல்ல பண்புகளைக் கட்டியமைப்பதாகச் சிறப்பான வாழ்க்கையை வழங்குவதாகவும் கல்வி இருக்க வேண்டும். உயர்ந்த நோக்கங்களை உள்வாங்குவதாகக் கல்வி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கல்வியை எப்படி வழங்க வேண்டும் என்பதிலும் அவர் தனக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார். நேர்மறையானதாகக் கல்வியையே மாணவர்களுக்குத் தர வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மனிதரைப் பலவீனப்படுத்தும். இளம் ஆண்களையும் பெண்களையும் உற்சாகமூட்ட வேண்டும். எல்லா நேரமும் அவர்களைக் குறைசொல்லிக் கொண்டேயிருக்கக் கூடாது என்றார் அவர். அவர்கள் சரியான நேரத்தில் முன்னேறிப்போவார்கள் என்று உறுதியான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். கல்விச்சேவையும் மகேசன் சேவையும் விவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ணரிடமிருந்து ஜீவன்தான் சிவன் என்று கற்றுக்கொண்டார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது என்று அந்தப் போதனையால் அவர் புரிந்துகொண்டார். அதனால்தான் அவர் “சாமான்ய மனிதர்களைத் தெய்வத்தின் வெளிப்பாடாகக் கருத வேண்டும்” என்றார். “சாமானியர்களுக்குச் செய்யும் சேவைதான் கடவுளுக்குச் செய்யும் வழிபாடு” என்றார். விவேகானந்தர் பாணியில் புரிந்துகொண்டால் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது என்பது தெய்வத்தை வழிபடுவதைப் போன்றது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போலக் கல்விச்சேவையும் மகேசன் சேவைதான். பிறருக்காகச் செய்யப்படுகிற சிறு வேலை கூட நமக்குள்ளிருக்கும் சக்தியை எழுப்பும் சக்தி படைத்தது. பிறர் நலத்தைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது என்று இளைஞர்களுக்கு உற்சாகமூட்டினார் அவர். கடவுளிடம் போய்ச் சேர்கிற இன்பத்துக்காக உயிரைத் துறந்துவிடுகிற மக்கள் உண்டு. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள். “கடவுளிடம் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பத்தைக் கூட வீசி எறிந்து விட்டுப் பிறருக்கு உதவி செய்யச் செல்லுங்கள்” என்று மக்களைத் தூண்டினார் அவர். இளைஞர்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை அபாரமானது. “உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய,இறைவனிடம் குன்றாத பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க, நூறாயிரம் ஆண்களும் பெண்களும் முன்வருவார்கள்” என்றார் அவர்.. அப்படி வருபவர்களின் உள்ளத்தில் ஏழைகளிடமும் ஒடுக்கப் பட்டவர்களிடமும் கருணை பொங்கும். அவர்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் அலைந்து, முக்திக்கான உபதேசத்தை, ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வாழ வேண்டும் என்ற உபதேசத்தை, சமூக எழுச்சியின் உபதேசத்தை, சமத்துவத்தின் உபதேசத்தைப் பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவித்தார் அவர். பெண்கள் உள்பட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கனவு இன்னமும் நிறைவேற்றப்படாமல் கிடக்கிறது. அதை நிறைவேற்றுவதுதான் அவரைச் சந்தோஷப்படுத்தும்.

No comments: